திங்கள், 9 பிப்ரவரி, 2009

உடல் நலம், கண்


இன்றைக்கு சிறுவர்கள் பலர் தங்கள் பதின் வயதுகளிலேயே கண்ணாடி போட்டுக் கொண்டு அலைவதை பார்க்க முடிகிறதல்லவா ? சற்றே பின்னோக்கித் திரும்பிப் பாருங்கள். இருபது வருடங்களுக்கு முன் கண்ணாடி போட்ட மனிதர்களைச் சந்திப்பதே அபூர்வம் அல்லவா ?
அதெப்படி இன்றைக்கு மட்டும் மிக மிக இளம் வயதிலேயே கண்ணாடி தேவைப்படுகிறது ? இப்படி ஒரு சிந்தனையின் விளைவாக நிகழ்ந்தேறியது ஆஸ்திரேலியாவில் ஒரு ஆராய்ச்சி.
4000 பேரை உள்ளடக்கி, அவர்களுடைய பார்வைக் குறைபாட்டுக்கான காரணங்களை மிக விரிவாக ஆராய்ந்ததில் கிடைத்த பதில் வியப்பூட்டுகிறது.
அதாவது, குழந்தைகள் வீட்டுக்கு வெளியே போதுமான நேரத்தைச் செலவிடாததே இந்த பார்வைக் குறைபாடின் காரணம் என்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு. மருத்துவ மொழியில் சொல்லவேண்டுமெனில், எட்டு வயதிற்கும் பன்னிரண்டு வயதுக்கும் இடைப்பட்ட பருவத்தில் வளர்ச்சியடையும் மயோபியா சரியான அளவில் இல்லாததே இந்த குறைபாட்டுக்குக் காரணம்.
குழந்தைகள் சிறுவயதில் வெளியே ஓடி விளையாடுவதன் அவசியத்தை இந்த ஆராய்ச்சி அதிர்ச்சியுடன் அறிவிக்கிறது. கண்ணின் கருவிழி சரியான அளவில் இருப்பதற்கும், ஒழுங்கான வடிவில் இருப்பதற்கும் இயற்கை வெளிச்சம் மிக மிக அதிகம் என்பது அந்த ஆராய்ச்சி அடித்துச் சொல்லும் செய்தியாகும்.
சிங்கப்பூரில் 30 விழுக்காடு குழந்தைகளுக்கும் இந்த நோய் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு திடுக் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அங்கே குழந்தைகள் வெளியே அலைவது மிகவும் குறைவு என்பதால் வருவதாம் இந்தப் பிரச்சனை.
வீடுகளில் தொலைக்காட்சியிலும், கணினி விளையாட்டுகளிலும் முழு நேரத்தையும் செலவிட்டு இறுக்கிக் கட்டப்பட்ட அடுக்கு மாடிகளில் குடியிருப்போர் அதிக கவனத்துடன் குறித்துக் கொள்ள வேண்டிய செய்தி இது.
ஏற்கனவே வெயிலில் கிடைக்கும் வைட்டமின் டி உடலுக்கு மிகவும் இன்றியமையானது எனும் ஆராய்ச்சிகள் வெளிவந்திருக்கின்றன. இப்போது, வெளியே சரியான நேரம் செலவிடவில்லையேல் பார்வைக்கே பிரச்சினை என்னும் புது ஆராய்ச்சியும் அத்துடன் சேர்ந்து கொண்டிருக்கிறது.
கிராமங்களில் சுதந்திரமாய் ஓடி விளையாடும் சிறுவர்கள் நல்ல ஆரோக்கியமான பார்வையுடன் இருப்பதற்கும் இதுதான் காரணமாய் இருக்கக் கூடும்.
குழந்தைகளின் வாழ்க்கை அறைகளுக்கும் ஒரு நாள்காட்டியைப் போல தொங்குவதற்கானதல்ல, ஒரு பட்டத்தைப் போல வானில் பறந்து திரிவதற்கானது. இயற்கையுடன் இணைந்து வாழ்தலே வலிமையானது என்பதை இந்த ஆராய்ச்சியும் வலியுறுத்துகிறது.